S.ஜானகி

நிர்ச்சலன நீர் மெத்தை மேல்
ஆழ்க்கடல் குழந்தையின்
உறக்கச்சிணுங்கல், 

கரை அறைந்தடிக்கும்
அலை அரக்கனின்
முரட்டுச் சின உறுமல்,

மயானத்தின் கிலி அலறல்,
தியானத்தின் நிலை ஓசை,

நிலம் பிளக்கும் இடியொலி,
மலர் விரியும் மெல்லிசை,

உள்ளப் பாற்கடலில்
பொங்கி நிறையும் அன்பு,

உயிர் வதைத்து சபிக்கும்
விரகதாபத்தின் விசும்பல்,

குழலையும் யாழையும் வென்ற
மழலையின் கொஞ்சல்,

பிரணவத்தின் பெரும் குரல்,
பிரளயத்தின் பேரோசை 
என
பிசிறின் எதிர்த்துருவத்தில் 
பிரபஞ்சத்தை நிறைத்து,

கண்களைத் துன்புறுத்தாமல்
காதுகளுக்குத் தந்த
பெண்சிலைக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக